ஷா ஆலம், டிச.17: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மலை, நீர் வீழ்ச்சி, ஆறு போன்ற சுற்றுலா மற்றும் முகாம் தளங்கள் நாளை முதல் ஏழு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும் மாநிலச் செயலாளருமான டத்தோ ஹாரிஸ் காசிம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
நேற்று அதிகாலை சுமார் 2.42 மணி அளவில், உலு சிலாங்கூர், பத்தாங் காலி, கம்போங் குவாந்தானில் உள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 300 மீட்டர் நீளமும் 70 மீட்டர் உயரமும் கொண்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தீயணைப்புப் படை, காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை, மலேசியச் சுகாதார அமைச்சகம் மற்றும் மலேசியச் சிறப்புத் தேடல் மற்றும் மீட்பு குழு (SMART) ஆகியவற்றால் தற்போது தேடுதல் மற்றும் மீட்பு (SAR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.