கோலாலம்பூர், ஜன 14: ஜனவரி 20,21,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சரக்கு வாகனங்களுக்கு சாலை தடை என்னும் நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சு (MOT) அமல்படுத்த உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதும், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் இடையே ஏற்படும் சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதும் இத்தடையின் முக்கிய நோக்கம் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“குறிப்பாக சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களால் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்தத் தடை அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த சாலை தடையுடன் தேசிய வேக வரம்பு குறைப்பு உத்தரவும் அமல்படுத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் www.lom.agc.gov. my என்ற இணையதளத்தில் விரிவான தகவல்களை பெறலாம். சாலை விதிகளை எப்போது கடைபிடிக்க வேண்டும் என்றும், வாகனம் ஓட்டும் போது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்துகிறது.
– பெர்னாமா