ஷா ஆலம். 17- மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் பயணிகள்
படகொன்றில் மேற்கொண்ட சோதனையில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக
வகைப்படுத்தப்பட்ட பெட்ரோல் கைப்பற்றப்பட்டதோடு இதன் தொடர்பில்
இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
பூலாவ் இண்டாவின் வடக்கே 0.2 கடல் மைல் தொலைவில் நேற்று
காலை 11.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில மெரிடைம்
கேப்டன் இயக்குநர் வீ.சிவக்குமார் கூறினார்.
பயணிகள் படகாக பதிவு செய்யப்பட்ட அந்த படகை 46 மற்றும் 49
வயதுடைய இருவர் செலுத்திய வேளையில் அதில் 1,312 வெள்ளி
மதிப்புள்ள 640 லிட்டர் பெட்ரோல் 26 கலங்களில் வைக்கப்பட்டிருந்தது
கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
கோலக் கிள்ளானிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் அந்த பெட்ரோலை
வாங்கிய அவ்விருவரும் அதனை பூலாவ் கெத்தாம் தீவுக்கு கொண்டுச்
சென்றது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்
அவர்.
இச்சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டம் மற்றும்
கட்டுப்படுத்தப்பட்ட பொருளை வைத்திருந்ததற்காக 1961ஆம் ஆண்டு
விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என அவர் தெரிவித்தார்.