குவாந்தான், ஜன 23- இங்குள்ள தஞ்சோங் பூனாய் படகுத் துறை அருகே நேற்று மாலை பெலாட் ஆற்றில் குதித்த பெண் ஒருவர் இன்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கையில் இருந்து தப்பும் போது ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் 42 வயதுடைய அப்பெண் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் காலை மணி 11.36 அளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புஸூ கூறினார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட ரோஹிங்கியா ஆடவர் ஒருவர் அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் வேகமான நீரோட்டத்தின் காரணமாக அம்முயற்சி தோல்வியில் முடிந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார். அந்தப் பெண்ணுக்கு போதைப் பழக்கம் இருப்பதாகவும் போதையை தணித்துக் கொள்வதற்காக அடிக்கடி அந்த இடத்திற்குச் செல்வது வழக்கம் என்றும் அவரின் மகன் கூறியதாக முகமது ஜஹாரி தெரிவித்தார். அப்பெண்ணின் உடல் சவப் பரிசோதனைக்காக இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.