ஷா ஆலம், ஜன 30- விளையாட்டரங்கம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் மறுமேம்பாடு தொடர்பில் பொது மக்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விளையாட்டுத் தொகுதி தொடர்பான கண்காட்சி இங்குள்ள எஸ்.ஏ.சி.சி. பேரங்காடியில் இம்மாதம் 26 முதல் அடுத்த மாதம் 10 வரை நடைபெறுவதாக அவர் சொன்னார். சுமார் 76.08 ஹெக்டர் நிலப்பரப்பில் 78 கோடியே 70 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த விளையாட்டுத் தொகுதியின் தோற்றத்தைச் சித்தரிக்கும் காணொளி ஒன்றையும் அவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். சமூகம், நிலையான வளர்ச்சி,தொழில் முனைவோர் மேம்பாட்டை உள்ளடக்கிய இத்திட்டத்தின் வசதிகளை இந்த காணொளி சித்தரிக்கிறது. இந்த விளையாட்டுத் தொகுதியில் 35,000 முதல் 45,000 பேர் பேர அமரும் வசதி கொண்ட பிரதான அரங்கம், மின்னியல் அறிவிப்பு பலகை, மாற்றுத் தினனாளிகளுக்கு உகந்த நடைபாதை, பிரமுகர்களுக்கான பிரத்தியேக பகுதி உள்ளிட்ட வசதிகளை இந்த அரங்கம் கொண்டுள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/01/PSX_20230128_152047-1-960x640.jpg)