NATIONAL

சக நாட்டவரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினர்- மூன்று அந்நிய ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், பிப் 8- சக நாட்டவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அவரிடம் 25,000 வெள்ளியைக் கேட்டு மிரட்டியது தொடர்பில் மூன்று அந்நிய நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

புகார்தாரரைத் தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்ட நபர், தன்னை ஒரு கும்பல் கைகளைக் கட்டி ஓரிடத்தில் அடைத்து வைத்துள்ளதோடு 25,000 வெள்ளியைக் கொடுக்கும்படியும் மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அதே தினத்தில் பிஜே செண்டர்ஸ்டேஜ் எனுமிடத்தில் அதிரடி சோதனை நடத்தி அம்மூவரையும் கைது செய்தனர் என்றார் அவர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான மூவரும் தண்டனைச் சட்டத்தின் 348வது பிரிவின் கீழ் விசாரணைக்காக நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :