கோலாலம்பூர், பிப் 8- பெட்ரோனாஸ் ஆலோசகர் டான்ஸ்ரீ முகமது ஹசான் மரிக்கான் தலைமையிலான நிதியமைச்சரின் சிறப்பு ஆலோசக மன்றத்தின் நியமனம் தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்டார்.
பொருளாதாரத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய இந்த குழுவினர் நிதியமைச்சர் என்ற முறையில் தமக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவர் என்று அன்வார் சொன்னார்.
இந்த சிறப்பு ஆலோசக மன்றத்தில் எஃப்.வி.எஸ்.பி. சென். பெர்ஹாட் நிர்வாகத் தலைவர் டத்தோ அகமது புவாட் முகமது அலி, சன்வே பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் இயா கிம் லியோங், மலாயா பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியர் டாக்டர் ராஜா ராசையா மற்றும் சரவா எனர்ஜி பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் டத்தோ அமார் அப்துல் ஹமிட் செபாவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சிறப்பு ஆலோசக மன்றத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து எந்த கட்டணத்தையும் பெற மாட்டார்கள் என்று அன்வார் தெரிவித்தார்.