ஷா ஆலம், பிப் 24: சுபாங் ஜெயா மாநகராட்சி, பிப்ரவரி 12 முதல் ஒரு வாரத்திற்குள் 1,093 டிங்கி சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
சுபாங் ஜெயா வின் துணை மேயர் முகமட் சுல்குர்னைன் சே அலி, கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 721 ஆகும். ஆனால், இவ்வாண்டு அந்த எண்ணிக்கையில் 372 சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்றார்.
“டிங்கியால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் வட்டாரம் என அடையாளப்படுத்தப்பட்ட டேசா மினியும் ரிம்பா, லெஸ்தாரி பெர்டானாவில் 87 நாட்களில் 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“டிங்கி சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பிப்ரவரி 15 முதல் மார்ச் 22 வரை சுபாங் ஜெயா மாநகராட்சி, மாவட்டச் சுகாதார அலுவலகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சிறப்பு ஒருங்கிணைந்த செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது,” என்று நேற்று சுபாங் ஜெயா மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் அவர் கூறினார்.
டிங்கியைக் குறைப்பதை உறுதிசெய்ய சமூகம் தங்கள் சுற்றுச்சூழலைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் முகமட் சுல்குர்னைன்.
“வாரத்திற்கு ஒருமுறை குறைந்தது 10 நிமிடங்களாவது ஏடிஸ் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தேடி சுத்தம் செய்யவும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.