கோலா லங்காட், மார்ச் 6: 2021 முதல் மாநில அரசு வழங்கிய இலவச கோவிட்-19 தடுப்பூசி மூலம் சுமார் 350,000 பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
வாரிசான் நெகிரி அறக்கட்டளை நிதியை பயன்படுத்தி வாங்கப்பட்ட 900,000 தடுப்பூசிகளில் 700,000 இதுவரை சிலாங்கூர் தடுப்பூசி (செல்வெக்ஸ்) திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
“மலேசியாவில் சொந்தமாகத் தடுப்பூசியை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரே மாநிலம் சிலாங்கூர் மட்டுமே. கடந்த பிப்ரவரி 7 முதல், இலவசக் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் வழங்கும் திட்டம் மாநிலத்தில் உள்ள 15 செல் கேர் கிளினிக்குகள் மற்றும் தி கே எல் கிளினிக் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
நாடு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, மாநில அரசு மக்களுக்கு நோய் தடுப்பூசிகள் வழங்குவதை விரைவு படுத்துவதற்காகச் செல்வெக்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து செல்வெக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் மூலம் மக்களுக்குப் பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டது.