கோல லங்காட், மார்ச் 6- எண்பதாம் ஆண்டுகளில் கட்டப்பட்ட கம்போங் சுங்கை மங்கீஸ் பொது மண்டபம் வட்டார மக்களின் வசதிக்காகத் தரம் உயர்த்தப்பட்டது. கிராமப்புற நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி 71,000 வெள்ளி செலவில் இந்த பொது மண்டபம் மேம்படுத்தப்பட்டதாகக் கம்போங் சுங்கை மங்கீஸ் கிராமத் தலைவர் கைருல் நிஜாம் ஜூமி தெரிவித்தார். இது தவிர, சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் ஒதுக்கீட்டின் கீழ் 40,000 வெள்ளி செலவில் மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதியும் சீரமைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். இந்த மண்டபம் கட்டப்பட்டதில் இருந்து இதுவரை அது மேம்படுத்தப்படவில்லை. 2012ல் கிராமத் தலைவராக நியமிக்கப்பட்டபோது இந்த மண்டபத்தைத் தரம் உயர்த்துவதில் முனைப்பு காட்டினேன். இனி வட்டார மக்கள் மழை காலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படால் நிகழ்ச்சிகளுக்கு தைரியமாக ஏற்பாடு செய்யலாம் என்று அவர் சொன்னார். இதற்கிடையில், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான மையமாக இந்த மண்டபத்தை குடியிருப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தாம் நம்புவதாக மாவட்ட அதிகாரி முகமது ஹீசா குறிப்பிட்டார். அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் சிறப்பான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.அவை நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/03/balai-960x640.jpg)