NATIONAL

இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் டிப்ளோமா கல்வி  மேற்கொள்ள அரியவாய்ப்பு!

கோலாலம்பூர், மார்ச் 22- மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின்
தொடர் முயற்சியினால், பட்டதாரிகளுக்கு டிப்ளோமா கல்வியில் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுத்துப் படிக்கும் அரிய வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது.

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடத்தைப் போதிக்க இந்த டிப்ளோமா பட்டம்
அவர்களுக்கு உதவும். அவ்வப்போது ஆசிரியர் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் கல்வி அமைச்சால் வெளியிடப்படும்போது, இந்த ஆசிரியர் டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் தமிழ்மொழி பாடத்தைப் போதிப்பதற்கு அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி சேவை ஆணையத்தின்(suruhanjaya perkhidmatan pendidikan) வழியும் எப்போது வேண்டுமானலும் முன்கூட்டியே விண்ணப்பங்களைச் செய்யலாம். மலாயாப் பல்கலைக்கழகத்தின் கல்வி புலத்தில் ஓர் ஆண்டு கல்வி பயின்று தேர்ச்சி பெறும்
மாணவர்களுக்கு டிப்ளோமா கல்வி சான்றிதழ்(Diploma Pascasiswah Pendidikan(Bahasa
Tamil) வழங்கப்படும்.

இதன் வழி இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தைப் போதிக்க அவர்களுக்கு
வேலை வாய்ப்புச் சூழல் ஏற்படும் என்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் கல்வி புலத்
துறையின் பேராசிரியர் முனைவர்  விசாலாட்சி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனிடையே மனித வள அமைச்சர் வ. சிவகுமார் கூறுகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்வி புலத்தில் டிப்ளோமா கல்வி பயில கிடைத்திருக்கும் வாய்ப்பை தமிழ் படித்த இந்திய மாணவர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது பல இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி போதிக்க ஆசிரியர்கள் இல்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழ்ப் பள்ளிகளில் இருந்து இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற இந்திய மாணவர்கள் தமிழ்
மொழியைத் தொடர்ந்து கற்க முடியாமல் உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியைப் போதித்து தர தேர்ச்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தேவை என்று அவர் சொன்னார்.

பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி படித்த மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்தக் கல்விக்கு விண்ணப்பிக்கும் படி மனித வள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்


Pengarang :