ஷா ஆலம், மார்ச் 29- வட்டி முதலைகளிடம் கடன் பெற்று அதனைத்
திரும்பச் செலுத்த த் தவறியவர்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தும்
செயலி ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை ஆலம் மாவட்ட போலீசார் கைது
செய்துள்ளனர்.
வட்டி முதலைகளின் கையாட்களாகச் செயல்பட்டு வந்த 21 முதல் 41
வயது வரையிலான இரு பெண்கள் உள்ளிட்ட இந்த ஒன்பது போரும்
இம்மாதம் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் சுங்கை பீசியில்
மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாக
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
இக்கும்பலிடமிருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு டின்
மற்றும் நான்கு போத்தல் சிவப்பு சாயம், மூன்று பூட்டுகள், மூன்று
சைக்கிள் பூட்டுகள், உடைகள் மற்றும் இரு மார்க்கர் பேனாக்களை
தாங்கள் கைப்பற்றியதாக அவர் சொன்னார்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எழுவர் கிரிமினல்
மற்றும் போதைப் பொருள் குற்றப் பின்னணியைக் கொண்டிருப்பது
கண்டறியப்பட்டது என நேற்று இங்குள்ள மாவட்ட போலீஸ்
தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.
இந்த கும்பல் 41 வயதுடைய ஆடவரின் தலைமையில் செயல்பட்டு
வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இக்கும்பலின் மூளையாகச் செயல்படும் ஆடவர் கடன் வாங்குவதற்காக
வட்டி முதலையை இணையம் வாயிலாக அணுகியுள்ளார்.
கடன் தருவதற்கு பதிலாக கடனைத் திரும்பச் செலுத்த த் தவறியவர்களை
அச்சுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் வேலையை வழங்க அந்த வட்டி
முதலை முன்வந்துள்ளார்.
இந்த வாய்ப்பினை ஒப்புக் கொண்ட அந்த ஆடவருக்கு ஒவ்வொரு
பணியையும் முடித்துக் கொடுக்கும் போது வெ.300 முதல் 450 வரை
ஊதியமாக வழங்கப்படும் என்று இக்பால் சொன்னார்.
கடனைத் திரும்பச் செலுத்த த் தவறியவர்களின் வீடுகள் மற்றும்
சொத்துகள் மீது சிவப்பு சாயம் வீசுவது, அவமதிக்கும் வகையிலான
வாசகங்களை எழுதி ஒட்டுவது, வீடுகளைப் பூட்டுவது போன்ற
செயல்களில் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது என்றார் அவர்.