கோலாலம்பூர், ஏப் 4- மக்களவையில் இன்று 2001ஆம் ஆண்டு மனநலச்
சட்டத்தை (சட்டம் 615) திருத்துவதற்கான மசோதா முதல் வாசிப்புக்குத்
தாக்கல் செய்யப்பட்டது.
2023 மனநல (திருத்த) மசாதாவை பிரதமர் துறை அமைச்சர் (சட்டம்
மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான்
தாக்கல் செய்தார்.
தற்கொலை புரிய முயலும் நபர்களை இடர் நெருக்கடி தலையீட்டு
அதிகாரிகள் பிடிப்பது உள்பட பல்வேறு அம்சங்களை இந்த மசோதா
உள்ளடக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி, தனக்கும் மற்றவர்களுக்கும்
அல்லது பொருள்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மனநலக்
குறைபாடு உள்ளவர்கள் எனத் தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை இடர்
நெருக்கடி தலையீட்டு அதிகாரிகள் தடுத்து வைப்பதற்கும் இந்த மசோதா
வகை செய்கிறது.
அதோடு மட்டுமின்றி எந்தவொரு வளாகத்திற்குள்ளும் உடைத்து நுழைவதற்கும் உட்செல்வதற்கு இடையூறை ஏற்படுத்தும் தடைகளை அகற்றுவதற்கும் அந்த அதிகாரிகளுக்கு அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது.
இந்த இடர் நெருக்கடி தலையீட்டு அதிகாரி என்பவர் போலீஸ்
அதிகாரியாக சமூக நல இலாகா அதிகாரியாக மற்றும் சிவில் தற்காப்பு
படையின் அதிகாரியாக இருக்கலாம் என்று அதில்
வரையறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மூன்று மசோதாக்கள் இன்று முதல் வாசிப்புக்கு தாக்கல்
செய்யப்பட்ட நிலையில் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது
அவை இரண்டாம் வாசிப்புக்கு தாக்கல் செய்யப்படும் என்று அசாலினா
சொன்னார்.