NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இலவச வாகனப் பரிசோதனை- புஸ்பாகோம் வழங்குகிறது

ஷா ஆலம், ஏப் 10- நோன்புப் பெருநாளை முன்னிட்டு தனியார்
வாகனங்களை இலவசமாகப் பரிசோதிக்கும் சேவையை புஸ்பாகோம்
எனப்படும் கணினிமய வாகன பரிசோதனை மையம் வழங்கவிருக்கிறது.

பெருநாள் காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்
நோக்கிலான இந்த சேவை இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 20ஆம் தேதி
வரை மேற்கொள்ளப்படும் என்று புஸ்பாகோம் தலைமைச் செயல்முறை
அதிகாரி முகமது சுக்கோர் இஸ்மாயில் கூறினார்.

தங்கள் வாகனங்களைப் பரிசோதிக்க விரும்புவோர் ஷா ஆலம்
(சிலாங்கூர்), தாமான் புக்கிட் மெலுரி (கோலாலம்பூர்), பாசீர் கூடாங்
(ஜொகூர்) நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள புஸ்பாகோம் மையங்களில்
காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சேவையைப்
பெறலாம் என்று அவர் சொன்னார்.

இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் புஸ்பாகோமின் நடமாடும்
வாகன சோதனை மையம் செயல்படும். சம்பந்தப்பட்ட இடங்கள்
தொடர்பான விபரங்களை புஸ்பாகோமின் அகப்பக்கம் மற்றும் பேஸ்புக்
வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த இலவசப் பரிசோதனையில் பிரேக், டயர், சஸ்பென்ஷன், புகை,
விளக்குகள், வாகனத்தின் கீழ் மற்றும் மேல் பாகம் மற்றும்
கருமையாக்கப்பட்ட கண்ணாடி ஆகியவற்றுக்கு முக்கியத்தும்
அளிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :