கிள்ளான், மே 2- சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 300 கோழிகள் விற்கப்பட்டது இந்த விற்பனைக்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு சான்றாக விளங்குகிறது.
கோழி தவிர்த்து, முட்டை, அரிசி, சமையல் எண்ணெய், மீன், இறைச்சி போன்றப் பொருட்களும் குறுகிய நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக இந்த விற்பனைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நோராஸ்லினா அப்துல்லா கூறினார்.
அதிக வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரும் எண்ணிக்கையானோர் இந்த மலிவு விற்பனையில் கலந்து கொண்டனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக பலர் காலை 8.00 மணி முதல் அவர்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கினர் என்று அவர் சொன்னார்.
இத்தகைய மலிவு விற்பனைகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பரவலாக கருத்து தெரிவித்தனர். பொது மக்களின் சுமையைக் குறைப்பதில் உதவ நாங்கள் முடிந்த வரை முயற்சிக்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள நுருள் ஜன்னா பள்ளிவாசலில் இன்று காலை நடைபெற்ற மேரு தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாநில அரசின் இந்த ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 10 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.