ஷா ஆலம், மே 8: இந்த நாட்டில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்று ஊழியர் சேம நிதி வாரியத்தின் (EPF) தலைவர் தெரிவித்தார்.
20 ஆண்டுகளில் முதியோர் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என எதிர்பார்க்கப் படும் போது, இந்நிலை குறித்து அச்சம் ஏற்படுவதாக டான்ஸ்ரீ அஹ்மத் பத்ரி முகமட் ஜாஹிர் கூறினார்.
2020ல் 3.6 மில்லியனாக இருந்த மொத்த முதியோர் எண்ணிக்கை 2060ல் 12.3 மில்லியனாக அதிகரிக்கும் என்றும், பெரும்பான்மையானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
“16.7 மில்லியன் தொழிலாளர்களில் 56 சதவிகிதம் மட்டுமே இபிஎப் மற்றும் பொது சேவை ஓய்வூதியத் திட்டத்தால் பாதுகாக்கப் படுகின்றனர். மேலும் இந்த விகிதம் சராசரி உலகளாவிய கவரேஜ் விகிதமான 68 சதவிகிதத்தை விட குறைவாக உள்ளது.
“பாதுகாக்கப் படாதத் தொழிலாளர் பெரும்பான்மையானவர்கள் சுயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட முறைசாரா தொழிலாளர்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, சமூகப் பாதுகாப்பில் இருந்து யாரும் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இபிஎப் அவுட்ரீச் திட்டம் போன்ற பல முயற்சிகளைத் தனது தரப்பு செயல்படுத்தியதாக அஹ்மத் பத்ரி கூறினார்.
2022 ஆம் ஆண்டில் தன்னார்வப் பங்களிப்புகளை வழங்கிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் (774,980 பேர்) அவுட்ரீச் திட்டம் நல்ல செயல்திறனைக் காட்டியது என்று அவர் விளக்கினார்.