SELANGOR

முகக்கவரி அணியாத உணவக நடத்துநர்களுக்கு வெ.1,000 அபராதம்- ஜூலை முதல் அமல்

அம்பாங் ஜெயா, மேம 10- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகப் பகுதியில்
உணவு விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முகக்கவரி அணியத்
தவறினால் 1,000 வெள்ளி அபாராதம் விதிக்கும் நடைமுறை வரும்
ஜூலை தேதி தொடங்கி அமலுக்கு வரவுள்ளது.

அம்பாங் ஜெயா வட்டாரத்தில் 800 உணவகங்களும் சுமார் 5,000 உணவு
அங்காடிக் கடைகளும் செயல்பட்டு வந்த போதிலும் இத்துறை
சார்ந்தவர்களில் 90 விழுக்காட்டினர் கட்டாய முகக்கவரி விதிமுறையை
இன்னும் கடைபிடிக்கவில்லை என்று அம்பாங் ஜெயா நகராண்மைக்
கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது கூறினார்.

இந்த கட்டாய முகக்கவரி விதிமுறை தற்போது வெறும் கண்காணிப்பு
நிலையில் மட்டுமே உள்ளதோடு இம்மாதம் இறுதி வரை அதன்
தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை மட்டுமே
மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த கண்காணிப்பு காலக்கட்டத்தில் முகக்கவரி அணிவதன்
முக்கியத்துவதை வலியுறுத்தும் 13,000 அறிக்கைகளை மின்னஞ்சல்
வாயிலாகவும் 5,000 அறிக்கைகளை வணிகர்களிடம் நேரடியாகவும்
வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள மெனாரா எம்.பி.ஏ.ஜே.வில் நடைபெற்ற நிகழ்வில்
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைவர் பொறுப்பை
அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.

மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த கட்டாய முக்கவரி உத்தரவை அனைத்து
உணவக நடத்துநர்களும் பின்பற்றி நடப்பர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும்
டாக்டர் அனி குறிப்பிட்டார்.

நாங்கள் அமலாக்க நடவடிக்கை எடுக்கும்வரை காத்திருந்து அதன்
பின்னரே விதிமுறையைப் பின்பற்றும் போக்கை கடைபிடிக்க வேண்டாம்.
சுயத் தூய்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த
விதிமுறையை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது என அவர் மேலும்
சொன்னார்.


Pengarang :