ஷா ஆலம், மே 17- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கை
வரலாற்றைச் சித்தரிக்கும் “அன்வார்- அன்டோல்ட் ஸ்டோரி“ எனும் எனும்
திரைப்படும் நாளை தொடங்கி சிலாங்கூரிலுள்ள 28 திரையரங்களில்
திரையிடப்படும்.
இந்தோனேசியாவின் விவா வேஸ்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த
திரைப்படத்தில் அன்வார் இப்ராஹிமின் வேடத்தை ஃபாரிட் கமால்
ஏற்றுள்ள வேளையில் இந்தோனேசிய நடிகையான அச்சா செப்ரிட்ரியாசா
டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசாவாக நடித்துள்ளார்.
கடந்த 1993 முதல் 1998 வரையிலான காலக்கட்டத்தைச் சித்தரிக்கும் இந்த
படத்திற்கு துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில்
ஊழலுக்கு எதிராக அன்வார் நடத்திய போராட்டம் மையக் கருவாக
விளங்குகிறது.
இந்த திரைப்படம் டிஜிவி ஒன் உத்தாமா, டிஜிவி சன்வே, பிரமிட், டிஜிவி
ஜெயா 33, டிஜிவி மைன்ஸ், டஜிவி புக்கிட் திங்கி, டிஜிவி புக்கிட் ராஜா,
டிஜிவி. ஐ-சிட்டி ஷா ஆலம் ஆகிய திரையரங்களில் திரையிடப்படும்.
1998ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டத்தில் நெருங்கிய
தொடர்புடையவரும் பிரபல கேலிச்சித்திர படைப்பாளருமான ஸூனார்
என அழைக்கப்படும் ஜூல்கிப்ளி அன்வார் ஹக் இந்த திரைப்படத்தைத்
தயாரித்துள்ளதோடு மூலக்கதையையும் எழுதியுள்ளார்.
அன்வார் கடந்த 2022 நவம்பர் 22ஆம் தேதி பிரதமராக ஆவதற்கு முன்னரே
இந்த திரைப்பட தயாரிப்பு முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். அவர்
பிரதமராக ஆவார் என்று அப்போது நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை
என்று ஜூல்கிப்ளி சொன்னார்.
படபிடிப்புக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல அரசியல் இடையூறுகள்
காரணமாக இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை
இந்தோனேசியாவில் நாங்கள் படமாக்கினோம் என அவர் மேலும்
தெரிவித்தார்.