NATIONAL

மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்- பீடோரில் சம்பவம்

ஈப்போ, மே 30- ஆடவர் ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி
பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பீடோர், கம்போங்
கோல்ட்ஸ்ட்ரீமில் உள்ள பயன்படுத்தப்படாத பழைய தொழிற்சாலை
ஒன்றில் நேற்று காலை நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் காலை மணி 11.30 அளவில் தங்களுக்கு தகவல்
கிடைத்ததாக பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் முகமது ஏசான் முகமது ஜைன்
கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர்
மின்சாரம் தாக்கிய நிலையில் காணப்பட்டதாக அவர் சொன்னார். அந்த
ஆடவரின் உடலில் மின்சாரம் பாய்ந்தவண்ணம் இருந்ததைத் தொடர்ந்து
தெனாகா நேஷனல் நிறுவனத்தின் உதவி நாடப்பட்டதாக அவர்
குறிப்பிட்டார்.

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டப் பின்னர் அவ்வாடவரை
சோதனையிட்ட மருத்துவக் குழுவினர் அவரை இறந்து விட்டதை
உறுதிப்படுத்தினர். அடையாளம் காணப்படாத அவ்வாடவரின் சடலம் மேல்
நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர்
தெரிவித்தார்.


Pengarang :