NATIONAL

தீக்கிரையான வீட்டில் மூதாட்டியின் சடலம் கருகிய நிலையில் மீட்பு

சிபு, ஜூன் 6- வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி ஒருவர் கருகி
மாண்டார். இத்துயரச் சம்பவம் இங்கிருந்து 146 கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள ஜாலான் முக்கா-பாலிங்கியான் சாலையின் கம்போங்
துத்துஸ் உலு எனுமிடத்தில் நேற்றிரவு நிகழ்ந்தது.

எண்பது வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டியின் உடல் வீட்டின்
இடிபாடுகளுக்கிடையே கண்டு பிடிக்கப்பட்டதாகச் சரவா மாநிலத்
தீயணைப்புத் துறையின் நடவடிக்கை மையப் பேச்சாளர் கூறினார்.

இந்த தீவிபத்து நேற்றிரவு 12.04 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மேலும், இந்த தீவிபத்தில்
அந்த வீடு முற்றாக அழிந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இத்தீவிபத்து ஏற்பட்ட போது அவ்வீட்டில் அறுவர் இருந்ததாகவும்
அவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணி பாதுகாப்பாக
உயிர்த்தப்பியதாகவும் அவர் சொன்னார்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முக்கா
தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்த வீர ர்கள்
விடியற்காலை 1.57 மணியளவில் தீயைக் கட்டுப்படுத்தினர் என்று அவர்
குறிப்பிட்டார்.

தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருவதாக அவர்
மேலும் சொன்னார்.


Pengarang :