கிள்ளான், ஜூன் 19- மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு வழி விடும்
வகையில் வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதி மாநிலச் சட்டமன்றத்தைக்
கலைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்
ஷா அல்ஹாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.
இங்குள்ள இஸ்தான ஆலம் ஷா, அரச மண்டபத்தில் இன்று காலை
நடைபெற்ற மாநில சட்டமன்றக் கலைப்பு தொடர்பான அறிவிப்பு நிகழ்வில்
மேன்மை தங்கிய சுல்தானின் தனிச் செயலாளர் டத்தோ முகமது முனிர்
பானி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் 14வது சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான
பிரகடனத்தில் சுல்தான் கையெழுத்திட்டார்.
முன்னதாக, மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப்
பெறுவதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மேன்மை
தங்கிய சுல்தானை சந்தித்தார்.
இந்த நிகழ்வில் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா, மாநிலச் சட்டமன்ற
சபாநாயகர் இங் சுயி லிம், மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ்
காசிம் மற்றும் சிலாங்கூர் அரச மன்ற பேராளர்கள் கலந்து கொண்டனர்.