SELANGOR

மக்களின் இன்னலைப் போக்குவதில் பேருதவி- டீம் சிலாங்கூர் அமைப்புக்கு மந்திரி புசார் பாராட்டு

செர்டாங், ஜூன் 19- பேரிடர்களின் போது மாநில மக்களுக்கு உதவிக் கரம்
நீட்டிய டீம் சிலாங்கூர் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷான் தனது நன்றியைத் தெரிவித்துக்
கொண்டார்.

பல்வேறு திட்டங்களையும் மக்கள் நலன் சார்ந்த சேவைகளையும்
வழங்குவதில் இந்த தன்னார்வலர் அமைப்பு காட்டி வரும் தீவிர ஈடுபாடு
குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் சொன்னார்.
சிரமத்தில் இருக்கும் மற்றும் உதவித் தேவைப்படும் மக்களுக்கு இந்த
தன்னார்வலர் குழுவினரே உற்ற துணையாக உள்ளனர் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

மாநிலத்தின் ஆற்றலை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்களின் சேவை
மற்றும் வழங்கிய அர்ப்பணிப்பின் வாயிலாக ஆக்கத்திறன் கொண்வர்கள்
என்பதை உணர்த்தியுள்ளீர்கள் என அவர் கூறினார்.

இங்குள்ள மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் நேற்றிரவு
நடைபெற்ற 2023 கித்தா டீம் சிலாங்கூர் விழாவில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அமிருடின் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் சுபிட்சத்தைக் காப்பதிலும் சவால்மிக்க காலங்களில் மாநில
அரசுக்கு உதவுவதிலும் டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் அளப்பரிய
பங்கினை ஆற்றினர் என அவர் மேலும் சொன்னார்.

மாநிலம் இன்னும் சிறப்பான நிலையை எட்டுவதற்கு ஏதுவாக நாம்
முன்னோக்கிச் செல்ல அனைத்து மக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுவது
முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :