NATIONAL

கொள்கலன் லோரி போலீஸ் நிலையப் பாதுகாவலர் சாவடியை மோதியது- போலீஸ்காரர் காயம்

ஈப்போ, ஜூன் 28- கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி தாப்பா
மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர்
சாவடியை மோதியதில் அந்த சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரர்
ஒருவர் லேசான காயங்களுக்குள்ளானார்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று பின்னிரவு 1.20 மணியளவில் தாங்கள்
தகவலைப் பெற்றதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் தலைமை ஆணையர் 1
சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது கொள்கலன் லோரி ஒன்று தாப்பா
மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர்
சாவடியை மோதியதில் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர்
காயங்களுக்குள்ளானது தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.

காயமுடைந்த அந்த போலீஸ்காரர் இ.எம்.ஆர்.எஸ். எனப்படும் அவசர
சேவைப் பிரிவு வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :