NATIONAL

மாநிலத் தேர்தலில் போட்டியிட மஇகா, மசீசவுக்கு வாய்ப்பு- ஜாஹிட் உறுதி

புத்ராஜெயா, ஜூன் 28- ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும்
தேர்தலில் மஇகா மற்றும் மசீசவுக்குத் தொகுதிகள் வழங்கப்படும் என்று
தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) தலைவர் டத்தோஸ்ரீ அகமது
ஜாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.

மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் சில பங்காளிக் கட்சிகளுக்குப்
போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என உலவி வரும் வதந்திகளுக்கு
இந்த அறிக்கை முற்றுப் புள்ளி வைக்கும் எனத் தாம் நம்புவதாகத் துணைப்
பிரதமருமான ஜாஹிட் கூறினார்.

மாநிலத் தேர்தலில் சில தே.மு. பங்காளிக் கட்சிகள் புறக்கணிக்கப்படும்
என்ற வதந்திகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தேசிய முன்னணியில் உள்ள நண்பர்களுக்கு இதனை வாக்குறுதியாக
அளிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.

நேற்று இங்கு மடாணி திவேட் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன்
பயிற்சி அகப்பக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு,
பினாங்கு ஆகிய மாநிலத் தேர்தல் அடுத்த சில வாரங்களில் ஏகாலத்தில்
நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூரில் போட்டியிட தங்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுவதை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்
நேற்று மறுத்திருந்தார்.

பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான
தொகுதி பங்கீடு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த
ஜாஹிட், இதன் தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும்
என்றார்.


Pengarang :