கோலாலம்பூர், ஜூன் 28- மஇகாவிலிருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் முன்னாள்
உதவித் தலைவர் செனட்டர் சி. சிவராஜ் அறிவித்துள்ளார். இந்த பதவி விலகல்
உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தமது பதவி விலகல் கடித்தத்தில்
கூறியுள்ளார்.
மேலவை உறுப்பினர் என்ற முறையிலும் இந்திய சமுதாயத் தலைவர் என்ற
அடிப்படையிலும் தனது பொறுப்புகளை எந்த தடையும் இன்றி குறிப்பாக கட்சித்
தலைமைத்துவத்தின் தலையீடு இன்றியும் ஆற்ற விரும்பும் காணத்தால் இந்த
முடிவை தாம் எடுத்ததாக மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ
எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு அனுப்பிய அந்த கடிதத்ததில் சிவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன் கட்சியில் இணைந்தது முதல் கட்சியின்
போராட்டங்களில் முழு கவனத்தையும் ஈடுபாட்டையும் காட்டி
வந்துள்ளதாக நான் நம்புகிறேன். எனது இந்த முடிவு எனக்கும் கட்சிக்குச்
சிறந்த ஒன்றாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்று
புக்கிட் கூச்சாய் பாரும் மஇகா கிளைத் தலைவருமான அவர் சொன்னார்.
மஇகாவில் பல்வேறு நிலை பதவிகளை வகித்த அனுபவத்தை கொண்ட சிவராஜ், கட்சிக்கும் மக்களுக்கும் தம்மால் இயன்ற சிறந்த சேவையை வழங்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டதோடு, நாட்டின் அரசியல் களத்தில், இந்திய சமூகத்தின் குரலாக மஇகா தொடர்ந்து ஒலிக்க தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.