பெர்மாத்தாங் பாவ், ஜூலை 1- பினாங்கில் உள்ள வாக்காளர்கள், குறிப்பாக மலாய்க்காரர்கள், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்புகிறார்.
கடந்த 15 வது பொதுத் தேர்தலின் போது கிளர்ந்தெழுந்த உணர்வுகளில் இருந்து பினாங்கில் உள்ள வாக்காளர்கள் ‘மீண்டு’, மாநில அளவிலான ஒற்றுமை அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த பினாங்கு அரசாங்கம் ஒற்றுமை அரசாங்கத்தை முழுமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பினாங்கில் உள்ள மலாய்க்காரர்களின் அவல நிலையை போக்க நாம் கூட்டரசு ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட முடியும்,” என்று அவர் இன்று குர்பான் பெர்டானா நிகழ்ச்சியை நடத்தும் போது கூறினார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, மாநிலத்தில் மலாய்க்காரர்களின் அவல நிலையை போக்குவதற்காகவும், அவர்கள் ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடாது என்பதற்காகவும் பினாங்கு பூமிபுத்ரா மேம்பாட்டுக் கவுன்சிலைப் புத்துயிர் பெற செய்ததாக அன்வார் கூறினார்.
மேலும், சுக்குக் மற்றும் சுழல் கடன்களை வழங்குவதன் மூலம் ஏஜென்சியின் கடன்களை மறுகட்டமைக்க மத்திய நில மேம்பாட்டு ஆணையத்திற்கு (ஃபெல்டா) அரசாங்க உத்தரவாதம் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மலாய்க்காரர்களின் உதவுவதில் ஒற்றுமை அரசாங்கம் தனது நேர்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று அன்வார் கூறினார். .
“இரண்டு நாட்களுக்கு முன்பு, ஃபெல்டாவின் 80 சதவீதம் கடனை ரத்து செய்வதற்கான ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டேன், அதில் 95 சதவீதம் பேர் மலாய்க்காரர்கள்,” என்று அவர் கூறினார்.
ஃபெல்டா வின் அதிக கடன், ஏஜென்சியின் மோசமான நிர்வாகத்தின் விளைவாகும், மக்களின் தவறு அல்ல என்று அன்வார் விளக்கினார்.
இதற்கிடையில், பெர்மாத்தாங் பாவில் தனது குடும்பத்தின் பாரம்பரிய இடங்களை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, அன்வார், “இன்ஷா-அல்லாஹ், நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று பதிலளித்தார்.
வாக்குகளைப் பெற மதம் மற்றும் இனப் பிரச்சினைகள் பயன்படுத்தும் “பச்சை அலை” கதையும் அவர் நிராகரித்தார்.
“தங்கள் கட்சிக்கு எதிரானவர்களை அல்லாஹ்வின் எதிரிகள் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இது சரியல்ல, நான் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ உடன் இணைந்து தேசத்தையும் மதத்தையும் தொடர்ந்து பாதுகாப்பேன், ”என்று அவர் கூறினார்.
– பெர்னாமா