NATIONAL

பண்டார் பாரு கிளாங் தொகுதியில் ஹராப்பானுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யத் தயார்- டத்தோ தெங் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூலை 4 – பண்டார் பாரு கிளாங் தொகுதியில் தாம்
இம்முறை போட்டியிடாவிட்டாலும் மாநிலத் தேர்தலில் அத்தொகுதியில்
ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தாம் தயாராக
உள்ளதாக அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான டத்தோ தெங் சாங் கிம்
கூறினார்.

பண்டார் பாரு கிளாங் தொகுதி மட்டுமின்றி அனைத்துத் தொகுதிகளிலும்
ஹராப்பான் வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவத் தாம் தயாராக
இருப்பதாக அவர் சொன்னார்.

நடப்பு நிர்வாகம் மாநிலத்தை பொருளாதாரம் மற்றும் சமூகவியல் ரீதியாக
மேம்படுத்தியுள்ளதால் வரும் மாநிலத் தேர்தலில் நமக்கு பெரிதாக
அச்சுறுத்தல் ஏற்படும் என நான் கருதவில்லை என அவர் தெரிவித்தார்.

நாம் பெருமைப்படத்தக்க வகையிலான அடைவு நிலையைப் பதிவு
செய்துளோம். வேறு எந்த மாநிலமும் நம்முடன் போட்டியிட முடியாது
என அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பின்னர் தாம் மாநில மேம்பாடு மற்றும் நிர்வாகத்
திட்டமிடலில் பங்கேற்காவிட்டாலும்கூட மாநிலத்தின் பொருளாதாரம்
தொடர்ந்து வலுவுடன் இருக்கும் என முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினரான அவர் நம்பிக்கையுடன் சொன்னார்.

வியூகம் மற்றும் விரிவான செயல்திட்டம் உள்ளிட்ட வலுவான
மேம்பாட்டு அடித்தளத்தை நான் உருவாக்கி விட்டேன். சிலாங்கூர்
தொடர்ந்து மேம்பாடு காண்பதற்கு ஏதுவாக புதிய நிர்வாகம் அந்த
திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என்றார்
அவர்.

கடந்த 1995ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும்
தெங், சிலாங்கூர் மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் 2008 முதல் 2013
வரை சட்டமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.


Pengarang :