NATIONAL

சிலாங்கூரை பக்கத்தான் வென்றால் அமிருடின் மந்திரி புசாராக நீடிப்பார்- பிரதமர் அறிவிப்பு

சுங்கை பெசார், ஜூலை 18- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி
சிலாங்கூர் மாநிலத்தை வென்றால் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மந்திரி
புசாராக தொடர்ந்து நீடிப்பார் என்று ஹராப்பான் கூட்டணியின் தலைவர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

மாநில மந்திரி புசாராக பதவி வகித்த காலத்தில் அதிகமான
முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் சிறப்பான நிர்வாகத்தை அவர்
வழங்கியுள்ளதாகப் பிரதமருமான அன்வார் கூறியதாகப் பிரி மலேசிய டுடே
இணைய ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

அமிருடின் மந்திரி புசாராக நீடிப்பார் என்ற தகவலை முதன் முறையாக
இப்போதுதான் வெளியிடுகிறேன். அமிருடினும் இதைக் கேட்டு
அதிர்ச்சியடைந்திருப்பார் என்று இங்குள்ள சிகிஞ்சானில் மடாணி அக்ரோ
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அமிருடின்,
மாநிலத்தின் தலைமைத்துவத்தை தாம் தொடர்ந்து வழி நடத்துவதற்குரிய
சாத்தியம் உள்ளதைக் கோடி காட்டியிருந்தார்.

சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராகக் கடந்த மூன்று தவணைகளாக
இருந்து வரும் அமிருடின் 2018ஆம் ஆண்டு முதல் மாநில மந்திரி
புசாராக பொறுப்பு வகித்து வருகிறார்.


Pengarang :