ANTARABANGSA

இறுதிக்கட்டத்தில் இடைத்தேர்தல் பிரசாரம் – இளம் வாக்காளர்களைக் கவர்வதில் பக்கத்தான் தீவிரம்

ஜோகூர் பாரு, செப் 5- பூலாய் இடைத்தேர்தல் பிரசார நடவடிக்கைகள்
முடிவுக்கு வருவதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில்
அத்தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் காயாட்
இளம் வாக்காளர்களை இலக்காகக் கொண்டு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகிறார்.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக முனைப்பு காட்டி வரும்
சுஹைஸான், பக்கத்தான் – பாரிசான் கட்சி தேர்தல் இயந்திரத்தின்
ஆதரவோடு இளைஞர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக
ஈடுபட்டு வருகிறார்.

இந்த இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரின் வெற்றிக்கு
இளைஞர்களின் வாக்குகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் தவிர்த்து தொகுதியிலுள்ள அனைத்து நிலையிலான
மக்களையும் சந்தித்து வாக்கு வேட்டையை தாங்கள் நடத்தி வருவதோடு
ஹராப்பான் – பாரிசான் கோட்டைகளாக மாறும் வாய்ப்புள்ள இடங்களுக்கும்
வருகை புரிந்து பிரசாரம் செய்து வருவதாக சுஹைஸான் சொன்னார்.

இது வரை நான் பூலாய் தொகுதியின் 70 விழுக்காட்டுப் பகுதிகளுக்கு
வருகை புரிந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். இன்று ஜோகூர் அம்னோ
மூத்த உறுப்பினர்களை பூலாய் நகரில் சந்தித்தேன் என்று அவர் கூறினார்.

செல்வாக்குமிக்க மூத்த அம்னோ தலைவர்களின் ஆதரவைக் கண்டு நான்
மனம் நெகிழ்ந்து போனேன். இது மிகவும் அற்புதமானது. அம்னோ மூத்த
தலைவர்களின் ஆதரவுடன் இந்த தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள
முடியும் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

ஜோகூர் பாரு, தாமான் கெமாசில் பூலாய் அம்னோ தொகுதியின் மூத்த
கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :