NATIONAL

பூலாய் இடைத்தேர்தலில் மொஹிடின் வெளியிட்ட அரசியல் ஃபாத்வா மீது போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், செப் 5- பூலாய் நாடாளுமன்ற
இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்
வேட்பாளர் சுஹைசான் கையாட்டுக்கு
எதிராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின்
வெளியிட்ட அரசியல் ஃபாத்வா தொடர்பில்
போலீஸார் விசாரணையைத்
தொடக்கியுள்ளனர்.

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் (3ஆர்)
சம்பந்தப்பட்ட அந்த கருத்தை மொஹிடின்
கடந்த 2ஆம் தேதி சனிக்கிழமை
வெளியிட்டதாக புக்கிட்

அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர்
டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன்
கூறினார்.

ஜோகூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகரும்
பூலாய் தொகுதி வேட்பாளருமான சஹைசான்
காயாட்டிற்கு வாக்களிப்பது ஹாராம் என
மொஹிடின் கூறியது தொடர்பில் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்
தொடர்பில் இரு புகார்கள்
செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

பொதுமக்களுக்கு அச்சம் மற்றும் பதட்டத்தை
உருவாக்கும் நோக்கில் இத்தகைய கருத்தை
வெளியிட்டது தொடர்பில் பெரிக்கத்தான்
நேஷனல் தலைவருமான அவர் மீது
குற்றவியல் சட்டத்தின் 505 (பி) வது பிரிவு மற்றும்
1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும்
பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது.

மொஹிடினுக்கு எதிராக இங்குள்ள காவல்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்
தொடர்ந்து இதன் தொடர்பில் புக்கிட் அமான்
வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப்
பிரிவு விசாரணையை மேற்கொண்டு
வருகிறது.

கடந்த சனிக்கிழமை, ஜோகூர் பாருவில்
உள்ள டத்தாரான் உத்தாமா கெம்பாசில்
நடைபெற்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்
உரையாற்றிய மொஹிடின், சுஹைசானுக்கு
வாக்களிப்பது ஹாராம் என்று கூறியதாகக்
கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 23ஆம் தேதி உள்நாட்டு
வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதைத்
தொடர்ந்து பூலாய் நாடாளுமன்றம் மற்றும்
சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளில்
இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :