பட்டர்வெர்த், செப் 25- மழைப் பருவம்
நெருங்கி வருவதால் வெள்ளம்
ஏற்படுவதற்கான சாத்தியத்தை
எதிர்கொள்வது தொடர்பில் அனைத்து
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனும்
தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல்
அமைச்சு விவாதித்து வருகிறது.
வெள்ளத்தின் போது தகவல் தொடர்பு
சேவைகள் தடைபடாமல் இருப்பதை உறுதி
செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக தகவல் தொடர்பு
மற்றும் இலக்கவியல் துறை துணையமைச்சர்
தியோ நீ சிங் கூறினார்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட
குடியிருப்பாளர்களை விரைவில்
பாதுகாப்பான இடத்திற்கு
வெளியேற்றுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு
உரிய தகவல்களை வழங்குவதற்கு தகவல்
இலாகாவை களத்திற்கு அனுப்புவோம்
என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற பினாங்கு மாநில
ஜசெக இளைஞரணி உறுப்பினர்களுடனான
சந்திப்புக்குப் பின்னர் பெர்னாமாவிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ள
நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்.
தங்கள் பகுதியில் தொலைத் தொடர்பில்
இடையூறு ஏற்படும் பட்சத்தில் அது குறித்து
உடனடியாகத் தகவல் அளிக்கும்படி பொது
மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று
அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தகவல்
தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது
குறித்து எங்களுக்கு இதுவரை எந்த புகாரும்
வரவில்லை. ஆனால் இது நடக்காமல் இருக்க
தகவல் தொடர்பு அமைச்சு தொலைத்தொடர்பு
நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று தியோ
கூறினார்.
நேற்று காலை நிலவரப்படிபடி பேராக், சபா மற்றும்
சரவாக்கில் உள்ள நான்கு வெள்ள நிவாரண மையங்களில்
மொத்தம் 299 பேர் இன்னும் தஞ்சமடைந்துள்ளனர்.