புத்ரா ஜெயா, அக் 3-இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி கொள்ள ஏதுவாக வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. பல போராட்டங்கள், பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த 7,500 அந்நிய தொழிலாளர்கள் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு கிடைத்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளாக பரிதவித்த இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு இப்போது நிரந்தர தீர்வு பிறந்துள்ளது. பொற்கொல்லர், முடித்திருத்தும் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் அந்நிய தொழிலாளர்களை பெறுவதற்கு முறையாக விண்ணப்பம் செய்யும் படி மனித வள அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளை அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார். அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள போதுமான ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பம் செய்யுங்கள். அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 7,500 அந்நிய தொழிலாளர்கள் பெற விண்ணப்பம் செய்யுங்கள். காலத்தையும் நேரத்தையும் கடத்தாமல் விண்ணப்பம் செய்து அந்நிய தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/07/FW1272745_PTJ29_12122022_KSM-lpr-960x632.jpg)