காஸா சிட்டி, அக் 16 – பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் எட்டாவது நாளில் 300 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்களாவர் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்ததாக அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 800 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இம்மாதம் 7ஆம் தேதி முதல் காஸா பகுதி கடுமையான இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்நோக்கி வருகிறது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதோடு 2,215 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு, 8,714 பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் குழந்தைகள் மற்றும் பெண்களாவர்.