புத்ராஜெயா, டிச 12- மடாணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது மற்றும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் ஆகியோர் முழு அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
டாக்டர் ஜூல்கிப்ளிக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 முதல் 2020 வரையிலான பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது இந்த அமைச்சுக்கு அவர் தலைமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது தொடர்பு மற்றும் பல்லுடக அமைச்சராக பதவி வகித்து வந்த கோபிந்த் சிங், தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சிலிருந்து இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இலக்கவியல் அமைச்சுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
முன்பு தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சுக்குத் தலைமையேற்றிருந்த ஃபாஹ்மி பாட்சில் புதிதாக உருவாக்கப்பட்ட தொடர்பு அமைச்சினை வழி நடத்துவார். இதன் துணையமைச்சராக தியோ நீ சிங் நியமிக்கப் பட்டுள்ளார்.