கோலாலம்பூர், டிச 27- ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் சபா மாநிலம் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பைதான் மற்றும் சண்டகான் ஆகிய மாவட்டங்களில் இரண்டு வெள்ள நிவாரண மையங்கள் நேற்றிரவு திறக்கப்பட்டன.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் பைதானில் உள்ள பாமோல் தேசியப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் சண்டகானில் உள்ள நூர் ஈமான் பள்ளிவாசலில் தஞ்சமடைந்துள்ளனர்.
பைதான் மாவட்டத்தில் ஐந்து கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சண்டகானில் ஒரு கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சபாவில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இதனிடையே, கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு அதிகரித்தது. அதே நேரத்தில் பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.