NATIONAL

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஐந்து வயது சிறுமி பலி

ஈப்போ, ஜன 31: நேற்றிரவு பாகன் செராய் அருகே ஜாலான் அலோர் பொங்சு கம்போங் மத்தாங் ஜெலுதோங் வழியாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இரவு 9.41 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து, பாகன் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

32 வயதுடைய பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது ஆண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 மற்றும் ஏழு வயது சிறுவர்களும் காயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :