கோலாலம்பூர், பிப் 22- காலணிகளை வைக்கும் அலமாரி
படுக்கையறைக்குச் செல்லும் பாதையில் வைக்கப்பட்டதால் சினம்
கொண்ட ஆடவன் ஒருவன் தன் வயதான தாயாரை காரின்
ஸ்டியரிங்கைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினான். இச்சம்பவத்தில் 74
வயதான அந்த மூதாட்டிக்குத் தலையில் காயம் ஏற்பட்டதோடு இரண்டு
பற்களும் உடைந்தன.
நள்ளிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆழ்ந்த உறக்கத்தில்
இருந்த அம்மூதாட்டியை சந்தேகநபர் கண்மூடித்தனமாகத்
தாக்கியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
அஸாம் இஸ்மாயில் கூறினார்.
இந்த சம்பவத்தைக் கண்ட சந்தேகப்பேர்வழியின் 30 வயது தம்பி தன்
அண்ணனை சாந்தப்படுத்த முயன்றுள்ளார். எனினும், அவரையும்
அவ்வாடவன் குத்தியுள்ளார் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்மூதாட்டி போலீசில் புகார் செய்ததைத்
தொடர்ந்து வேலையில்லாத அந்த 36 வயது சந்தேக நபரை
போலீசார் கைது செய்ததாக அவர் சொன்னார்.
அந்த ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்
போதைப் பொருளை உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
கைதான ஆடவனை விசாரணைக்காக எதிர்வரும் 27ஆம் தேதி வரை தடுத்து
வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை தாங்கள் பெற்றுள்ளதாகக் கூறிய
அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 326வது பிரிவின்
கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.