NATIONAL

காரில் ஐந்து கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு – இருவர் கைது

சிரம்பான், மார்ச் 13 – காரின் பொருள்கள் வைக்கும் பகுதியில் ஐந்து கிலோ
போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரு
நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 1.50 மணியளவில் இங்குள்ள பண்டார் பாரு நீலாயில்
உள்ள கார் நிறுத்தமிடத்தில் இருந்த பெரேடுவா அக்சியா ரக காரை
சோதனையிட்ட மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள்
தடுப்பு பிரிவைச் சேர்ந்த குழுவினர் உள்நாட்டினரான நாற்பது வயது
மதிக்கத்தக்க ஓர் ஆண் மற்றும் பெண்ணைக் கைது செய்ததாக நெகிரி
செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அகமது ட்ஷாப்பிர் யூசுப்
கூறினார்.

அந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில் 5,225 கிராம் எடை கொண்ட
ஷாபு வகை போதைப் பொருள் அடங்கிய ஐந்து பொட்டலங்கள்
மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர்
சொன்னார்.

அவ்விரு சந்தேகப்பேர்வழிகளிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில்
அவர்கள் போதைப் பொருளை உட்கொண்டது தெரியவந்தது. மேலும்
குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் இரு முந்தைய
குற்றப்பதிவுகளையும் அவர்கள் கொண்டுள்ளது தொடக்க கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 172,625 வெள்ளியாகும் எனக்
கூறிய அவர், இந்த போதைப் பொருளை 10,450 போதைப் பித்தர்களுக்கு
விநியோகிக்க முடியும் என்றார்.

இந்த போதைப் பொருள் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர்
வட்டாரங்களில் விநியோகம் செய்யப்படவிருந்தாகச் சந்தேகிக்கப்படுகிறது
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :