புத்ராஜெயா, மே 3 – சில மாநிலங்களில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப நிலையை சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால் அந்த வானிலை குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசனின் ஆய்வின் அடிப்படையில் பள்ளிகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை அமைச்சு உடனடியாக வெளியிடும் என்று அவர் சொன்னார்.
இன்று மருத்துவ சாதன ஆணையத்தின் (எம்.டி.ஏ.) சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டப் பின்னர் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல் நினோ பருவநிலை மாற்றத்தைத் தொடர்ந்து வெப்பமான பருவநிலை ஜூலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது நேற்று தெரிவித்திருந்ததார்.
இந்த வெப்ப அலை காரணமாகப் பள்ளிகளை மூட வேண்டியதன் அவசியம் குறித்து கேட்கப்பட்ட போது பாக்டர் ஜூல்கிப்ளி இவ்வாறு பதிலளித்தார்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸூக்கு மேல் இருந்தால் மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்று கல்வி அமைச்சு பள்ளி நிர்வாகத்தினரை அறிவுறுத்தியுள்ளது.