லாபுவான், மே 28 – தீர்வையற்ற தீவில் நீடித்து வரும் IMM13 சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், கோலாலம்பூரில் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கும் கூட்டரசு பிரதேசத் துறை கவனம் செலுத்தும்.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற கூட்டரசு பிரதேச பகுதிகளின் மாநிலப் பாதுகாப்பு செயற்குழு கூட்டத்தின் எண்.1/2024-ன் போது, இந்தப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பகுதிகள்) டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
“கூட்டத்தில் முதன்மையாக பல்வேறு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பிரச்சனைகள், லாபுவானில் உள்ள IMM13 மற்றும் வெளிநாட்டு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
IMM13 என்பது சபா மற்றும் லாபுவானில் அகதி அந்தஸ்து உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணமாகும். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் பண்டார் பாரு செந்தூலில் ரோஹிங்கியா மக்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்ட விவகாரத்தையும் டாக்டர் ஜாலிஹா முன்னிலைப் படுத்தினார், மேலும் இந்த விவகாரம் உடனடியாக கவனிக்கப்படும் என்றார்.
ராயல் மலேசியன் போலீஸ்,ராயல் மலேசியன் சுங்கத்துறை. குடிநுழைவுத்துறை, கோலாலம்பூர் மாநகர சபை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் மற்றும் கேஎல் ஸ்ட்ரைக் ஃபோர்ஸ் என்ற சிறப்புப் பிரிவை நிறுவுவதாகவும் அவர் தெரிவித்தார்.