ANTARABANGSA

தந்தையின் வாகனம் தவறுதலாக மோதி பச்சிளம் பாலகன் மரணம்

ஜெர்த்தே, மே 30-  ஆடவர் ஒருவர் தனது நான்கு சக்கர இயக்க வாகனத்தை நகர்த்தும் போது தவறுதலாக தன் மகனை மோதினார். இச்சம்பவத்தில்  அவரின் ஒரு வயது எட்டு மாதம் நிரம்பிய மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இங்குள்ள கம்போங் ராஜா, கம்போங் வாக்காப் குபோரில் நேற்று காலை 9.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்த ஆடவர் தனது வீட்டின் எதிரே காரை கழுவியப் பின்னர் அதனை வேறு இடத்திற்கு நகர்த்தும் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரோசாக் முகமது கூறினார்.

வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த அப்பாலகன் வாகனத்தை நோக்கி நகர்ந்து வந்ததை அறியாத அவரின் தந்தை வாகனத்தை நகர்த்தியுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வாகனத்தில் சிக்கிய அப்பாலகனை அவரின் தந்தை உடனடியாக கோங் மேடான் சுகாதார மையத்திற்கு கொண்டுச் சென்றதாகவும் எனினும் காலை 10.30 மணியளவில் அவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் அப்துல் ரோசாக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவு மற்றும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்ற அவர் குறிப்பிட்டார்.


Pengarang :