கோலாலம்பூர், மே 30- உலு சிலாங்கூர் மாவட்டத்தின் புக்கிட் செந்தோசாவில் உள்ள ஸ்ரீ கெம்போஜா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மரம் விழுந்ததில் மூன்று கார்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.59 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தகவல் கிடைத்ததை தொடர்ந்து புக்கிட் செந்தோசா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்று அவர் சொன்னார்.
மரம் வேரோடு சாய்ந்ததில் அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் இருந்த புரோட்டோன் வீரா மற்றும் இரு பெரேடுவா மைவி ரக கார்கள் சேதமடைந்தன என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.