கோலாலம்பூர், மே 30- அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக் கொண்டதற்கு ஃபென்னெக் ரக ஹெலிகாப்டர் நிர்ணயிக்கப்பட்ட உயரம் மற்றும் தடத்திலிருந்து விலகி ஏ.டபள்யூ.139 ஹெலிகாப்டரின் பாதையில் நுழைந்ததே காரணம் என்பதை இந்த விபத்து தொடர்பான விசாரணை வாரியத்தின் முடிவுகள் காட்டுகின்றன.
அதே சமயம், ஏ.டபள்யூ.139 ஹெலிகாப்டர் விமானி தடத்தை மாற்றுவதில் கவனத்தைச் செலுத்தியதால் விபத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டது இந்த விபத்துக்கான இரண்டாவது காரணமாக விளங்குகிறது என விசாரணை வாரியம் கண்டறிந்துள்ளது என அரச மலேசிய கடற்படையின் தலைவர் அட்மிரல் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஆயோப் கூறினார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி லூமுட் கடற்படைத் தளத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு ஹெலிகாப்டர்களிலும் இருந்த பத்து கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஃபென்னேக் ஹெலிகாப்டரில் கருப்புப் பெட்டி இல்லாததால் இந்த விபத்துக்கு மனிதத் தவற்றை காரணமாக விசாரணை வாரியத்தின் முடிவுகள் சுட்டிக்காட்டவில்லை என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஃபென்னெக் ஹெலிகாப்டரில் கருப்பு பெட்டி இல்லாததால் இந்த விபத்துக்கு மனிதத் தவறுதான் காரணம் என்ற முடிவுக்கு வருவதற்கான எந்த தரவுகளும் இல்லை என்றார் அவர்.
அந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை செய்தியாளர்களிடம் இன்று வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.