NATIONAL

இன்று முதல் மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பாகப் பொது மக்களின் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வு நடைபெறும்

கோம்பாக், ஜூலை 1 – உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பில் செலாயாங்
நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) கடந்த மே 31ஆம் தேதி வரை பொது
மக்களிடமிருந்து 44,029 ஆட்சேபங்களை பெற்றுள்ளது.

இந்த ஆட்சேபங்கள் தொடர்பில் பொது மக்களின் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வு
இன்று முதல் தேதி தொடங்கி ஆகஸ்டு 30ஆம் தேதி வரை இரு
மாதங்களுக்கு நடைபெறும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் சாஹ்மான்
ஜலாலுடின் கூறினார்.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு
மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக நகராண்மைக் கழகம் நேற்று
தொடங்கி தகவல்களை அனுப்பி வருவதாக அவர் சொன்னார்.

கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை கிடைத்த ஆட்சேபங்கள் மட்டுமே ஏற்றுக்
கொள்ளப்பட்டன. அதன் பின்னர் கிடைத்த 1,712 ஆட்சேபங்கள் நிராகரிக்கப்பட்டன
என்று இங்குள்ள மெனாரா எம்.பி.எஸ்.சில் நகராண்மைக் கழகக் கூட்டத்திற்கு
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த ஆட்சேபங்கள் தொடர்பில் விளக்கம் பெற விரும்பும் பொது மக்கள்
நகராண்மைக் கழகத்தின் சொத்து மதிப்பீட்டு மற்றும் மேலாண்மைத் துறையை
03-61265905/5906/5907 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக
மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை.

காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை
உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும்
(1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு
வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய
இடங்களுக்கான மதிப்பீட்டு வரியைக் கடந்த 1992ஆம் ஆண்டு முதல்
அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா
நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18
ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.

இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு தங்களின்
ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட
தேதிகளுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் பொது மக்கள்
தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு இந்த மதிப்பீட்டு
வரி மறு ஆய்வு மிக முக்கியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கடந்த மே 30ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :