NATIONAL

காவல் துறையின் தகவல்களை கசியவிட்டது தொடர்பில் நகைச்சுவை நடிகர், மனைவி கைது

ஷா ஆலம், ஜூலை 3 – ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
நடைபெற்ற நிகழ்வு தொடர்பான தகவல்களை டெலிகிராம் செயலி
வாயிலாக கசியவிட்டதன் பேரில் நகைச்சுவை நடிகர் மற்றும் அவரின்
மனைவி ஆகியோர் நேற்று தொடங்கி இரண்டு நாட்களுக்குத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.

முப்பத்தெட்டு மற்றும் 37 வயதுடைய அந்த தம்பதியர் இங்குள்ள செக்சன்
9 போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு கைது
செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
இக்பால் இப்ராஹிம் கூறினார்.

கைதான அத்தம்பதியர் நேற்று காலை ஷா ஆலம் மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்ட
வேளையில் விசாரணைக்காக அவர்களின் கைபேசிகளும் பறிமுதல்
செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 504வது பிரிவு, 1998ஆம்
ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவு, சிறு
குற்றச் சட்டத்தின் 14வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

முன்னதாக, ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின்
உள்விவகாரம் தொடர்பான எழுத்துபடிவமும் புகைப்படங்களும் சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.


Pengarang :