NATIONAL

போலி நிதிக் கோரிக்கை தொடர்பில் டத்தோஸ்ரீ கைது- எம்.ஏ.சி.சி. நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூலை 11 – சுமார் 150,000 வெள்ளி மதிப்புள்ள நிறுவன இணைப்புப் பணிக்காக தவறான விவரங்களைக் கொண்ட நிதிக் கோரிக்கையைச் சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் டத்தோஸ்ரீ அந்தஸ்து  கொண்ட நிதி வியூக  ஆலோசகர்  ஒருவரை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம்  (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

ஐம்பது வயதுடைய  அந்த சந்தேக நபர் கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 9) மாலை 5.00 மணியளவில் எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரம் ஒன்று கூறியது.

அந்த  சந்தேக நபர் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்த குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு  நிறுவனங்களை இணைப்பதற்கான  கார்ப்பரேட் சேவைக்காக  தவறான  பணக் கோரிக்கையை அவர் சமர்ப்பித்துள்ளார். எனினும் அத்தகைய நிறுவன இணைப்புப் பணி மேற்கொள்ளப்படவில்லை என நம்பப்படுகிறது  என்று அவ்வட்டாரம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இதனிடையே, எம்.ஏ.சி.சி. புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹாஷிமை பெர்னாமா தொடர்பு கொண்டபோது  இந்த  கைது நடவடிக்கையை அவர் உறுதிப்படுத்தினார்.  இந்த வழக்கு  2009 ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :