பொய்யானச் தகவலை முகநூலில் பதிவேற்றம் செய்த ஆடவருக்கு வெ.25,000 அபராதம்

கோலாலம்பூர், ஜூலை 20 –  குர்ஆன் ஓதுதல் மற்றும் நினைவூட்டல் பேரவை 2024  நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் தவறான தகவலைப் பதிவேற்றியதற்காக  ஆடவர் ஒருவருக்கு 25,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) தெரிவித்தது.

ஆண்டுதோறும் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த  நிகழ்ச்சி குறிப்பிட்ட தரப்பினரின் ஆதிக்கம் காரணமாக   இந்த ஆண்டு நடைபெறவில்லை என்று முகநூலில்  பதிவேற்றியதற்காக    1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அந்நபருக்கு  அபராதம் விதிக்கப்பட்டது என்று அது குறிப்பிட்டது .

அந்நபர் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் (3ஆர்) தொடர்பான  சொற்களையும் அந்தப் பதிவில்  பயன்படுத்தியுள்ளார் என்று அந்த ஆணையம்  ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

பிறரை  தொந்தரவு செய்யும்,  துன்புறுத்தும், அச்சுறுத்தும் அல்லது ஏளனப்படுத்தும் நோக்கத்துடன் ஆபாசமான, அநாகரீகமான, தவறான மற்றும் புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்களை   உருவாக்குவது அல்லது அனுப்புவதை 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்   233 (1)(ஏ) பிரிவு தடை செய்கிறது.

இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு 50,000 வெள்ளி வரை அபராதம், ஒரு வருடம் சிறை அல்லது இரண்டும்  விதிக்கப்படலாம்.

இணையச் சேவை மற்றும் சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்துவதை எம்.சி.எம்.சி. கடுமையாகக் கருதுகிறது. இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அது  எச்சரித்தது.


Pengarang :