SELANGOR

இவ்வாண்டில் 1,000 சிறார் பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், ஜூலை 22- சிலாங்கூர் ஆரம்ப குழந்தை மற்றும் கல்வி
பராமரிப்பு (இம்பாக் சிலாங்கூர்) திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 600
வீட்டு குழந்தைப் பராமரிப்பாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இரண்டு நாள் இலவச சிறார் மேம்பாட்டு ஊக்கப் பயிற்சித் திட்டத்தின்
வாயிலாக அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக
யாயாசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) பொது நிர்வாகி கான் பெய் நீ
கூறினார்.

இவ்வாண்டில் 1,000 குழந்தை பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி
வழங்கப்படுவதை உறுதி செய்யும் யாவாஸ் அறவாரியத்தின்
நோக்கத்திற்கேற்ப இந்த பயிற்சித் திட்டம் அமைந்துள்ளது என்று அவர்
சொன்னார்.

இதுவரை 600 குழந்தை பராமரிப்பாளர்கள் 11 பயற்சிகளை முழுமையாக
முடித்த பங்கேற்புக்கான சான்றிதழ் பெற்றுள்ளனர். எஞ்சிய 400
பேருக்கு இவ்வாண்டிற்குள் பயிற்சியளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்
என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் டிவியில் இன்று ஒளிபரப்பான ஹாய் சிலாங்கூர் நேரடி
நிகழ்ச்சியில் அவர் இதனைக் கூறினார்.
கோல்டன் ஏஜ் எனப்படும் ஆறு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு சிறார்
மேம்பாடு பற்றிய புரிதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களை இந்த
பயிற்சித் திட்டம் உள்ளடக்கியுள்ளது. கூடுதலாக, சிறார்கள் சம்பந்தப்பட்ட
சட்டங்கள், சுகாதாரம் மற்றும் சத்துணவு குறித்தும் அவர்களுக்கு
போதிக்கப்படுகிறது என்றார் அவர்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த பிள்ளைகளைத்
தாங்கள் பராமரிப்பதை மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில்
செயல்படும் பராமரிப்பு மையங்களைச் சேர்ந்தவர்கள் உணர்ந்துள்ளனர்.

ஆகவே, சிறார் பராமரிப்பாளர்கள் போதுமான திறன் மற்றும்
அறிவாற்றலைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின்
திட்டம் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :