ஷா ஆலம், ஜூலை 26- ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவனைப் புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் தாயார் சார்பில் தாம் இனிமேல் ஆஜராகப் போவதில்லை என்பதை வழக்கறிஞர் மாமுட் ஜூமஹாட் உறுதிப்படுத்தினார்.
வழக்கின் முதல் நாளான இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி டாக்டர் சியாலிசா வார்னோ முன்னிலையில் தாம் ஆஜராகவில்லை என்று மாமுட் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நான் இனி இஸ்மானிராவை பிரதிநிதிக்கப்போவதில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இஸ்மானிரா அப்துல் மனாஃப் (வயது 29) மற்றும் அவரது கணவர் ஜைய்ம் இக்வான் ஜஹாரி (வயது29) ஆகிய இருவரும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆறு வயதான தங்கள் மகனுக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் அளவுக்கு அவர்களைப் புறக்கணித்ததாக கணவர் மற்றும் மனைவி மீது கடந்த ஜூன் 13ஆம் தேதி குற்றச்சாட்டப்பட்டது.
எனினும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அவ்விருவரும் மறுத்து விசாரணை கோரினர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(a) பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 34 மற்றும் 31(1) வது பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.