NATIONAL

12 வயதுச் சிறுவன் கார் ஓட்டியச் சம்பவம்- தந்தையிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

புத்ராஜெயா, ஜூலை 30 – பூச்சோங், தாமான் புத்ரா இம்பியானில் 12 வயதுச்
சிறுவன் ஒருவன் தன் இரு சகோதரர்களை காரில் ஏற்றிக் கொண்டு
பயணித்தச் சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் தந்தையிடம் போலீசார்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஐம்பத்து மூன்று வயதுடைய அந்த ஆடவர் வாக்குமூலம் அளிப்பதற்காக
நேற்றிரவு 11.30 மணியளவில் சிப்பாங் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப்
பிரிவுக்கு வந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான்
கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

அந்த பன்னிரண்டு வயதுச் சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு
எட்டு மணியளவில் ஆறு மற்றும் நான்கு வயதுடைய தன் இரு
சகோதரர்களுடன் பெரேடுவா வீவா காரில் அந்த குடியிருப்பு பகுதியை
வலம் வந்தது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக
அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 39(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாகக் கூறிய அவர், இதன் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள்
மாவட்ட போலீஸ் நிலையத்தைத் தொடர் கொள்ளுமாறு கேட்டுக்
கொண்டார்.

தனது இரு சகோதரர்களை காரில் ஏற்றிக் கொண்டு பெரேடுவா வீவா
காரில் வீடமைப்புப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 14 வயதுச்
சிறுவனை அக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தடுத்து
நிறுத்தியதைச் சித்தரிக்கும் 1 நிமிடம் 49 விநாடி காணொளி சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

வீட்டின் அருகில் இருந்த வேகக் கட்டுப்பாட்டு மேட்டை வேகமாக கடந்த
அந்த காரை பெண்மணி ஒருவர் தடுத்து நிறுத்தும் காட்சி அந்த
காணொளியில் பதிவாகியிருந்தது.

அச்சிறுவன் செலுத்திய அக்கார் அந்த பகுதியை பல முறை கடந்ததாகவும்
இதன் தொடர்பில் தாம் காவல் துறையில் புகார் செய்யவுள்ளதாகவும்
அந்த பெண் கூறியிருந்தார்.


Pengarang :